கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - நிபுணர்கள் எச்சரிக்கை!
நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேபாளம் மற்றும் திபெத் எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.
இமயமலையில் உறைந்த நிலையில் இருந்த பாறைப் பாளம் உடைந்து, பனிப்பாறையோடு சேர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதனால் பனியில் தேங்கியிருந்த நீர் வெளியாகி, பாறை மற்றும் படிவுகளுடன் சேர்ந்து மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்தது.
சில இடங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை போல வெள்ளம் சீறிப்பாய்ந்து எல்லையோரச் சாவடிகளை அழித்தது. கனடாவிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கிவிட்டதாக பொமரோய் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆற்று நீர்மட்டத்தை அளவிடும் வழக்கமான அமைப்புகளைத் தாண்டி, ஆபத்தான மலைப்பகுதிகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.