இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க புதிய செயலி!
இந்தியாவில் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் புதிய ‘செயலி’யை அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவில் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் புதிய ‘செயலி’யை அறிமுகம் செய்துள்ளார்.
இது குறித்து துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
புதிய ‘செயலி’ அறிமுகம்
உலக அளவில் கொரோனா தாக்கம் காரணமாக பெரும்பாலான வர்த்தகங்கள் டிஜிட்டலுக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எளிய முறையில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக இந்திய வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் சார்பில் டிஜிஎப்டி என்ற புதிய ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ‘செயலி’யை ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு மென்பொருள் உடைய செல்போன் மற்றும் கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களை வெளிநாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் எளிதில் தொடர்பு கொண்டு அங்குள்ள பொருட்களை இறக்குமதி செய்யவும், தங்கள் பொருட்களை அங்குள்ள இறக்குமதியாளர்களிடம் தொடர்பு கொண்டு விற்பனை செய்யவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
வர்த்தக வாய்ப்பு
இந்த ‘செயலி’யை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் இந்தியாவில் அறிமுகம் செய்தார். இதன் மூலம் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை மத்தியத்தர மற்றும் சிறு தொழில்களை ஊக்கப்படுத்தி வெளிநாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்தி தருவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ‘செயலி’யானது இந்தியாவின் புதிய வர்த்தக கொள்கைகள், அறிவிப்புகள் ஆகிய வகைகளை உடனுக்குடன் தரும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ‘செயலி’யானது வாரத்தில் 7 நாட்கள் 24 மணி நேரமும் செயல்படும். இதில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொண்டு வர்த்தக வாய்ப்புகளை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.