15 கோடி ஆண்டுகள் பழமையான 'பாம்பு கழுத்து' டைனோசர் இனம் ; தாய்லாந்தில் மீண்டும் அதிசயம்
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கலாசின் மாகாணத்தில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான, புதிய வகை மாபெரும் டைனோசர் இனம் ஒன்றின் புதைபடிவத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதிய இனத்திற்கு 'யுராகாசரஸ் கலாசினென்சிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சுவாரசியமான பின்னணி
கடந்த மே மாதம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டைனோசரான 'நாகாடைட்டன்' கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இரண்டாவது முக்கிய கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு புதிய டைனோசர் இனத்தை உறுதி செய்ய பல எலும்புகள் தேவைப்படும். ஆனால், இந்த முறை 'Scientific Reports' என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, டைனோசரின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் 'ஒரே ஒரு முதுகுத்தண்டு' எலும்பை வைத்து இந்த புதிய இனம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த எலும்பில் உள்ள தனித்துவமான 'Y' வடிவ அமைப்பும், அதன் காற்று அறைகளும் இதுவரை உலகில் கண்டறியப்பட்ட எந்த டைனோசர் எலும்புடனும் ஒத்துப்போகவில்லை என்பதால் இது புதிய இனம் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த டைனோசரின் நீண்ட கழுத்தைக் குறிக்கும் வகையில், சமஸ்கிருத சொல்லான 'யுராகா' (Uraga - அதாவது பாம்பு/சர்ப்பம்) மற்றும் கிரேக்க சொல்லான 'சாரஸ்' (Saurus - பல்லி) ஆகியவற்றை இணைத்து 'யுராகாசரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
இது கண்டறியப்பட்ட இடத்தைக் சிறப்பிக்கும் வகையில் 'கலாசினென்சிஸ்' என்ற மாகாணப் பெயரும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.