கொரோனாவை விரட்ட புதிய யுக்தி; வடகொரிய அதிபரின் உத்தரவு
உலகம்மெங்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில் கொரோனாவை தனது ஸ்டைலில் விரட்ட அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் இருந்து 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். இதனால், அனைத்து நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய திட்டம் ஒன்றின் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அந்த தடுப்பூசிகள் தங்களுக்கு வேண்டாம் என நிராகரித்திருந்தார்.
அதோடு கொரோனா தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொற்று பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஒருபோதும் மீறக்கூடாது எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.