நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம் ; பரிதாபமாக பலியான 38 தொழிலாளர்கள்
நைஜீரியாவின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் உள்ள சுரங்கத்தில் விஷவாயு கசிவால் திடீரென தீப்பற்றி வெடித்தில் 38 தொழிலாளா்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளாதாக வெளிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காா்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் இதுபோன்ற சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது.
இதனால் அந்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.