நைஜீரியா கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்..11 பேர் பலி
நைஜீரியா கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் காட்ச்சினா மாகாணத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள் என பாகுபாடு இன்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளுக்கும் தீ வைத்தனர். இந்த கொடூர தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். அது மட்டுமின்றி அந்த பயங்கரவாதிகள் கிராம மக்கள் பலரை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.