இரவு விடுதிகளில் ஊசியால் குத்தப்பட்ட நூற்றுக்கணக்கானோர்: பிரான்சில் மர்ம தாக்குதல்
பிரான்சில் இரவு நேரம் விடுதிகளுக்கு சென்ற நூற்றுக்கணக்கானோர் ஊசியால் குத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். இதுவரை 300கும் மேற்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, இது ஏன் நடக்கிறது அல்லது இரவு விடுதிகள் மற்றும் பார்களில் மக்களுக்கு ஏதாவது ஊசி போடப்பட்டதா என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.
பாரிஸ், துலூஸ், நான்டெஸ், நான்சி, ரென்னெஸ் மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குத் தெரியாமல் அல்லது அனுமதியின்றி ஊசியால் குத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
18 வயதான இளைஞர் ஒருவர் இசை கச்சேரிக்கு சென்ற நிலையில், மே 4ம் திகதி ஊசியால் குத்தப்பட்டுள்ளார். அவருக்கு அப்போது தலைசுற்றல் ஏற்பட்டதுடன், தலைவலி மற்றும் அவரது கையில் ஒரு வித்தியாசமான துளையிடப்பட்ட அடையாளங்கள் மற்றும் காயங்கள் இருப்பதைக் கண்டார்.
தொடர்ந்து அடுத்த நாள் அவர் மருத்துவமனைக்கு சென்று சோதனைக்கு உட்பட்டுள்ளார். மேலும், இதுவரை புகார் அளித்த 302 பேர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் ஊசி குத்தப்பட்ட பெண்களில் ஒருவர் மீதும் துஸ்பிரயோக தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.