ஈரானில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியான 55 கனேடியர்கள்... விசாரணை அறிக்கை வெளியானது
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த கனடா விசாரணை அதிகாரிகள் தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 176 பேர் கொல்லப்பட்டார்கள்.
அவர்களில் 55 பேர் கனேடிய குடிமக்கள், 30 பேர் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள். விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ஒப்புக்கொண்டது.
ஆனால், கனேடிய சிறப்பு தடயவியல் குழு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கியது. விசாரணையின் முடிவில், ஈரான் திட்டமிட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கோ, ஈரான் அதிகாரிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதற்கோ ஆதாரம் இல்லை என அந்த குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த முடிவு 176 அப்பாவி மக்களின் மரணத்திற்கு ஈரான்தான் பொறுப்பு என்ற விடயத்தை மாற்றிவிடாது என்றும் அந்த குழு கூறியுள்ளது.