மாஸ்க் அணிய தேவையில்லை; அமெரிக்க அதிரடி
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டால், மாஸ்க் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய்க்கட்டுபாட்டு தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு, தடுப்பூசி பணி மும்பரமாக அங்கு நடைபெற்று வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, இப்போது கொரோனா பரவலை பெருமளவு குறைத்துள்ளது. நாட்டில் கொரோனா உச்சத்தில் இருந்த போது, மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது.
அதன் பின்னர் கொரோனா பரவல் குறைய, மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கூட்டமான இடங்களில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், தியேட்டர்கள் போன்ற உள் அரங்கு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தால் கூட்டம் இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிய பரிந்துரைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்பதுடன், தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம். இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல் இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.