நாக்கை அடக்கிக்கொள்ளவேண்டும்; ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி
காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez) டிரம்ப் இற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் , காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கியூபா ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் ,
யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது
மனித உயிர்கள் உட்பட அனைத்தையும் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக அதிகாரமும் இல்லை.
கியூபாவின் மக்கள் இறையாண்மையுடன் தங்களுக்கான அரசியல் மாதிரியை தேர்வு செய்வதை பொறுக்க முடியாமல் நமது நாட்டின் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள்.
கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு புரட்சியை குறை கூறுபவர்கள் நாக்கை அடக்கிக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகளின் பலனை இப்போது அனுபவித்து வருகிறது. கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு.
நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. கியூபா ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அது 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேலும், கியூபா யாரையும் அச்சுறுத்துவதில்லை. கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.