வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் வன்சன் பகுதியில் இருந்து ஜப்பான் கடல் பகுதி நோக்கி இந்த பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5.20 மணிக்கு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா இணைந்து கடந்த 5 நாட்களாக கூட்டு ராணுவ பயற்சி நடத்தியது.
இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்று நிறைவடைந்த நிலையில் வடகொரியா இன்று அதிகாலை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.