உலக கப்பல் போக்குவரத்தில் புதிய மாற்றம் ; முக்கியத்துவம் பெறும் வடக்கு கடல் வழித்தடம்
உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு திட்டங்கள் காரணமாக வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Route) மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆர்டிக் கடற்கரையில் பாரண்ட்ஸ் கடல் முதல் பெரிங் நீரிணை வரை சுமார் 5,600 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள இந்த வழித்தடம், காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி வருவதால் முன்னைய காலங்களைவிட அதிகமாகப் பயன்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.

செங்கடல் தாக்குதல்கள், சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல்வழிகளில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வடக்கு கடல் வழித்தடம் மாற்றுப் பாதையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீனாவிலிருந்து ஐரோப்பாவை சென்றடைய இந்த வழித்தடம் சுமார் 30 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் நிலையில், சூயஸ் கால்வாய் வழியாக சுமார் 45 நாட்களும், நன்னம்பிக்கை முனை வழியாக சுமார் 60 நாட்களும் ஆகின்றன.
எனினும், வடக்கு கடல் வழித்தடம் பொதுவாக ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் மட்டுமே செயல்படுவதுடன், சூயஸ் கால்வாயுடன் ஒப்பிடுகையில் இதன் சரக்கு போக்குவரத்து அளவு இன்னும் குறைவாகவே காணப்படுகிறது.