ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் (Deal) செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கருத்துத் தெரரிவித்த ட்ரம்ப், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்தார்.

இதனால் தற்போதைக்கு உடன்படிக்கை செய்யும் எண்ணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் பிரதான நிபந்தனையாக, ஈரான் தனது அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஏனைய நிபந்தனைகள் எவை என்பதை அவர் பகிரங்கப்படுத்த மறுத்துவிட்டார்.
சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளதாகவும், இராஜதந்திர காரணங்களுக்காக அந்த நாடுகளின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் 'கார்க்' (Kharg) எண்ணெய் ஏற்றுமதி மையத்தை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
மேலும், "வேடிக்கைக்காக (Just for fun) அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும்" என அவர் கூறியிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.