முழுமையாக தடுப்பூசி பெற்றும் கனடாவில் வேலையிழக்கும் அபாயத்திலிருக்கும் செவிலியர்
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றும், தனது வேலையை இழக்கும் அபாயத்திலிருக்கிறார் கனேடிய செவிலியர் ஒருவர்.
ரொரன்றோ பொது மருத்துவமனையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கெல்லாம் சிகிச்சையளித்தவர் Denis Varaka. ஆனால், அவர் இப்போது தன் வேலையை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்திலிருக்கிறார்.
அதற்கு காரணம் அவர் பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசி!
நடந்தது என்னவென்றால், Denis ரஷ்யாவிலிருக்கும் தன் பெற்றோரைக் காண்பதற்காக சென்றிருந்தார். வயதான பெற்றோரைக் காணும் முன் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் அவர்களுக்கும் பாதுகாப்புதானே என்று எண்ணி தடுப்பூசி பெற்றுக்கொண்டார் Denis. ஆனால், அவர் பெற்றுக்கொண்டது ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்பூசி.
பிறகு பணிக்காக கனடா திரும்பியபோது, அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி காத்திருந்தது. முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு வரலாம் என செய்தி கிடைக்க, தான் Sputnik V தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக்கொண்டதாக அவர் கூற, கனடாவில் Sputnik V தடுப்பூசி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அவரால் உடனடியாக வேலையில் சேரமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.
அக்டோபர் 8ஆம் திகதிக்குள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றை பெற்றுக்கொண்டால்தான் அவர் பணிக்கு வரமுடியும் என அவர் பணி புரியும் மருத்துவமனை கூறிவிட்டது.
Denis இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டு 3 மாதங்கள்தான் ஆகின்றன. அடுத்து ஒரு தடுப்பூசி பெறவேண்டுமானால் ஆறு மாத இடைவெளியாவது விடவேண்டும். அவர் ஏற்கனவே புற்றுநோயிலிருந்து மீண்டவர். எனவே அடுத்தடுத்து வெவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் தனது உடல் நலம் பாதிக்குமோ என்ற அச்சம் வேறு அவருக்கு உள்ளது. ஆனால், உடனடியாக வேலைக்கு வராவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்றும் அவரது மருத்துவமனை கூறிவிட்டது.
ஆக, என்ன செய்வதென தெரியாமல், தடுப்பூசி பெற்றும் வேலையை இழக்கும் ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கிறார் Denis!