மதத்தால் அமைச்சராகும் வாய்ப்பை இழந்த நஸ்ரத் கனி
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நஸ்ரத் கனி, 2018 ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் - காஷ்மீரில் பிறந்த நஸ்ரத் கனி, பிரித்தானியாவில் குடியேறியவர்.
இந்நிலையில் 2020 ஆண்டு பெப்ரவரியில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜொன்சன், அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.
எனினும், இதன்போது நஸ்ரத் கனிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓராண்டுக்கு பிறகு நஸ்ரத் கனி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: “பிரித்தானியாவில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் விவாதம் நடைபெற்றபோது, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கொறடா மார்க் ஸ்பென்சர் , எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
நான் ஒரு முஸ்லிம் என்பதால் என்னுடன் பேச, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அசௌகரிமாக உள்ளது என அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்த சம்பவத்தை வெளியே கூறினால் என் எதிர்கால அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் என சிலர் எச்சரித்தனர். அதனால் நான் மௌனம் காத்து வந்தேன். கட்சியின் மீதான எனது நம்பிக்கையை இழக்கவில்லை என நான் பாசாங்கு செய்ய மாட்டேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்வது குறித்து யோசித்து வருவதாக” அவர் கூறினார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் கொறடா மார்க் ஸ்பென்சர், நஸ்ரத் கனியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அத்துடன் அவ்வாறான வார்த்தைகளை தான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.