மீண்டும் தடை ; தவிடுபொடியான சுவிஸ் வீரரின் ஒலிம்பிக் கனவு
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் தகதியை சுவிட்ஸர்லாந்தின் குறுந்தூர ஓட்ட வீரர் அலெக்ஸ் வில்சன்(Alex Wilson) இழந்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் சுவிட்ஸர்லாந்து அணியினருடன் டோக்கியோ பயணித்த அலெக்ஸ் வில்சன்(Alex Wilson), அங்கு ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கபற்றவிருந்தார்.
எனினும் அவர் மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை விளையாட்டுத்துறைக்கான நியாயாதிக்க சபை மீண்டும் அமுல்படுத்தியதால் அவரது ஒலிம்பிக் கனவு தவிடுபொடியானது.
இந்நிலையில் தான் சாப்பிட்ட மாசடைந்த மாட்டிறைச்சியின் மூலமே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தனது உடலில் கலந்திருக்கக்கூடும் என அலெக்ஸ் வில்சன் (Alex Wilson)வாதிட்டார்.
ஆனால், 30 வயதான வில்சனுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை மீண்டும் அமுல்படுத்திய விளையாட்டுத்துறைக்கான நியாயாதிக்க சபை, அந்தத் தடை உடன் அமுலுக்கு வருவதாகவும் இன்று அறிவித்தது.
ட்ரென்பொலோன் எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலில் கலந்திருப்பது கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுவிட்ஸர்லாந்தின் ஊக்கமருந்து தடுப்புப் பிரிவினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து சுவிட்ஸர்லாந்தின் விளையாட்டுத்துறை அமைப்பான சுவிஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் அந் நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றிடம் வில்சன்(Alex Wilson) மேன்முறையீடு செய்திருந்தார்.
அவரது மேன்முறையீட்டை பரிசீலித்த இரண்டு அமைப்புகளும் ஜுலை மாதம் அவர் மீதான தற்காலிகத் தடையை நீக்கியிருந்தன.
ஆனால், தடை நீக்கத்தை எதிர்த்து வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் சங்கம்) செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த விளையாட்டுத்துறை நியாயாதிக்க சபை அந்தத் தடையை மீண்டும் அமுலப்படுத்திய நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அலெக்ஸ் வில்சன்(Alex Wilson) இழந்துள்ளார்.