கனடாவின் இரு முக்கிய விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி
கனடாவின் மிகப்பெரிய இரு விமான சேவை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கனடாவின் இரு பெரிய விமான சேவை நிறுவனங்களான WestJet மற்றும் Air Canada ஆகியவை தங்களின் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
பிப்ரவரி மாதத்திற்கான விமான சேவைகளில் 20% அளவுக்கு விமானங்களை ரத்து செய்துள்ளதாக WestJet விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 15% அளவுக்கு விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்த மூன்று வாரத்தில் WestJet நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் தட்டுப்பாடு, கனடா அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவையே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
இதேவேளை, மார்ச் மாதத்திற்கான விமான சேவைகளில் 15% ரத்து செய்வதாக அறிவித்துள்ள Air Canada, பிப்ரவரி மாதத்திற்கான சேவைகளில் 11% ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதனால் மொத்தமாக 6,805 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், கரீபியன் தீவுகளில் 14 பகுதிகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ள Air Canada, இது ஜனவரி 24 தொடங்கி ஏப்ரல் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு அடுத்து சில தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என WestJet நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான விமானங்கள் தொடர்ந்து ரத்தாகும் சூழல் மீண்டும் உருவாகியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.