அமெரிக்காவில் தீவிரமடையும் Omicron தொற்று: விரிவான தகவல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐவருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள Omicron தொற்றானது உலகில் 30கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை பரவியுள்ளது. அதிகபட்சமாக நோர்வேயில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 120 விருந்தினர்களுல் 60 பேர்களுக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவிலும் Omicron தொற்று தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கில் ஐவருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா முழுமையும் இதுவரை 10 பேர்களுக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, கொலராடோ மற்றும் மினசோட்டாவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிலரில் லேசான அறிகுறிகளுடன் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஹவாய் பகுதியில் தடுப்பூசி போடப்படாத ஒருவருக்கு மிதமான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரவும் புதிய கொரோனா மாறுபாடினை எதிர்கொள்ளும் பொருட்டு, ஜோ பைடன் நிர்வாகம் புதிய பரிசோதனை விதிகளை அறிவித்துள்ளது.
சர்வதேச பயணிகள் கட்டாயம் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வீடுகளிலேயே சோதனை மேற்கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவில் இருந்து சமீபத்தில் கொலராடோ திரும்பிய நபருக்கே புதிய மாறுபாடு கண்டறியப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்க மக்கள் தொகையில் 60% அல்லது 196 மில்லியன் மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.