ஓமிக்ரான் பரவலால் புது வகை தொற்று உருவாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஓமிக்ரான் மாறுபாடு வேகமாக பரவுவதால் புதிய வகை தொற்று உருவாகக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஓமிக்ரான் தொற்று அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, இலங்கை உட்பட ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
முந்தைய ஆல்பா, டெல்டா மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில், ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. வேகமாக பரவும் இந்த தன்மை தான் அதிக அளவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் விரைவில் அந்த வைரஸ் மாற்றம் பெறும். அப்போது புதிய வகை வைரஸ் உருவாகும். ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது. அது மரணத்தையும் விளைவிக்கக் கூடியது.
ஆனால், டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் சற்று ஆபத்து குறைந்ததுதான்.
அதேவேளை, புதிதாக உருமாறும் வைரஸின் வீரியம் எவ்வாறு இருக்கும் என தற்போதைய சூழலில் கணிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.