அவுஸ்திரேலிய நிலநடுக்கத்தை முன்னரே உணர்ந்த ஐந்தறிவு பிராணி; வைரலாகும் காணொளி
அவுஸ்திரேலியாவின் மெல்பொர்னில் விக்டோரியாவின் மான்ஸ்ஃபீல்டில் காலை 9.15 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான நிலையில் அந்த நிலநடுக்கமானது மாநிலம் முழுவதும் உணரப்பட்டது.
நில நடுக்கம் அடிலெய்ட், நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரை மற்றும் சிட்னி வரை உணரப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ஜியோ சயின்ஸ் அவுஸ்திரேலியா சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, மான்ஸ்பீல்ட் அருகே, நான்கு ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கத்தை அறிவித்தது. எனினும் இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இதேவேளை இந்த நிலநடுக்க பரபரப்புக்குள் கரோல் என்ற வெள்ளைப்பூனை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறும் முன்னரே சில விலங்குகள் அதனை உணர்ந்து விடுமென கூறப்படுவதுண்டு.
Not a joke: the earthquake started as I was filming Carol playing with her new floppy fish toy. You can see her notice something’s happening here before I do. I am a dumb woman who thought for a sec *this toy was making the floor shake*. pic.twitter.com/Z3BTPEN0Pl
— Brodie Lancaster (@brodielancaster) September 21, 2021
அந்தவகையில் மென்பொர்ன் நிலநடுக்கத்தை மனிதர்கள் உணர்வதற்கு முன்னரே, அந்த வெள்ளைப் பூனை உணர்ந்ததாக குறிப்பிட்டு, அதன் உரிமையாளர் திருமதி லங்காஸ்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் , மெல்பொர்னிலுள்ள வீட்டில் விளையாட்டு மீனுடன் கரோல் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பூனையின் நடத்தையில் அசாதாரண நிலைமை தென்பட்டது. திடீரென விளையாட்டை நிறுத்தி விட்டு, திகைத்தபடி பூனை நிமிர்ந்து பார்த்த பின்னர் இயல்பற்ற நிலையில் மீனை தட்டிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து உடனடியாக பூனை அறை வாசலில் சென்று உட்கார்ந்து விட்டது.
ஏதாவது அபாயமென்றால் தப்பிச் செல்ல வசதியாக- விலங்குகளிற்குள்ள நுண்ணறிவின் அடிப்படையில் பூனை செயற்பட்டதாக அதன் உரிமையாளர் பதிவிட்டுள்ள நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.