ஒற்றை பலூனால் ஸ்தம்பித்த ஜேர்மன் நகரம் ஒன்று!
ஜேர்மனியில் ஒற்றை பலூனால் திடீரென்று ஒரு நகரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்துப் போனதன் காரணம் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் டிரெஸ்டன் நகரிலேயே திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனால் சுமார் 300,000 குடியிருப்புகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து என மொத்தமும் செயலிழந்து போயுள்ளது.
இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினருக்கு சுமார் 30கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றுள்ளது. அது மட்டுமின்றி லிஃப்டுகளில் சிக்கியுள்ளதாக 24 வழக்குகள் பதிவாகியுள்ளது.
இதேவேளை முக்கியமான இரு மருத்துவமனைகள் அவசர தேவைக்கான மின்சாரத்தை பயன்படுத்தி, பாதிப்பில் இருந்து தப்பியுள்ளனர். எனினும் ஒரு சில நிமிடங்களில் சில பகுதிகளில் மின்சாரம் திரும்பிய நிலையில், 2 மணி நேரத்தில் நிலமை மொத்தமாக சீரடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், பலூன் காரணமாகவே குறித்த மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
அந்த பலூனில் சுற்றப்பட்டிருந்த உலோகம் பூசப்பட்ட பகுதி மின்சாரம் பகிர்ந்தளிக்கும் முக்கிய பகுதியில் மோதியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்ட செயலா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.