நோவா ஸ்கோஷியாவில் படகு விபத்து – ஒருவர் பலி, மற்றுமொருவரைக் காணவில்லை!
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திலுள்ள கிங்ஸ் கவுண்டியில் கனடா தினத்தில் இடம்பெற்ற கொடூர படகு விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
அய்ல்ஸ்ஃபோர்ட் ஏரியில் பயணித்த படகில் இருந்து சிலர் தூக்கி வீசப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கனடிய அரச விசேட பொலிஸார் மற்றும் அவசர மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கிங்ஸ் கவுண்டியைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் அந்தப் படகில் பயணித்ததாகவும், இதன்போது ஏரியின் நீர்மட்ட நிலைமைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக இரு பயணிகள் படகிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருகில் படகில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் இருந்த ஒருவரைக் மீட்டுள்ளார்.
எனினும், அய்ல்ஸ்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, படகிற்குள்ளேயே இருந்த ஏனைய மூன்று ஆண்களும் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு காணாமல் போயுள்ள, அய்ல்ஸ்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய இரண்டாவது நபரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விபத்து குறித்த விசாரணைகள் தொடர்வதால், அய்ல்ஸ்ஃபோர்ட் ஏரிப் பகுதியில் பொலிஸார் மற்றும் முதலுதவி மீட்புக் குழுவினரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் என பொலிஸார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இத்தேடுதல் பணியில் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஹெலிகாப்டர், வேலி தரைவழித் தேடல் மற்றும் மீட்புக் குழு, சிவில் வான்வழித் தேடல் மற்றும் மீட்புச் சங்கம் மற்றும் பொலிஸாரின் நீருக்கடியிலான மீட்புக் குழு ஆகியன இணைந்து ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.