கனடாவில் தீபாவளியை கொண்டாடுவதில் இப்படியொரு சிக்கலா?
கனடாவின் ஒன்றாரியோவைச் சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தின் நகராட்சித் தேர்தல்கள் தீபாவளி தினமன்று நடாத்தப்பட உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழர்கள் உள்ளிட்ட தென் ஆசியாவைச் சேர்ந்த பெரும்பான்மையினர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இதேவேளை, மாகாணசபை சட்டங்களின் அடிப்படையில் நகராட்சித் தேர்தல் தினம் நிர்ணயம் செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினமன்று வாக்களிக்க முடியாதவர்கள் அதற்கு முன்னதாகவே அஞ்சல் மூலமும், முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்களின் ஊடாகவும் வாக்களிப்பு செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
தீபாவளி தினத்தில் தேர்தல் நடாத்தப்படுவதனால் பண்டிகையைக் கொண்டாடும் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்களிப்பு வீதம் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக இந்திய கரீபியன் ஒன்றியத்தின் தலைவர் ரயன் சிங் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வாக்களிப்பு வீதம் குறைந்தால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மத ரீதியானதும் கலாச்சார ரீதியானதுமான முக்கிய பண்டிகையின் போது மக்கள் வீட்டில் குடும்பத்துடன் இருக்க விரும்புவார்கள் எனவும் வாக்களிக்கச் செல்ல ஆர்வம் காட்ட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மாகாணத்தின் நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்கிடம் கோரிக்கை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த இரண்டு ஆண்டுகளும் பண்டிகையை உரிய முறையில் கொண்டாட முடியவில்லை எனவும் இந்த தடவை தேர்தல் நடைபெறுவதனால் தமது திட்டங்கள் குழம்பிவிடும் எனவும் இந்துக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடும் மக்களுக்கு முன்கூட்டியே வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.