வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்ட கனேடிய விமான ஊழியர்கள்: வெளியான காரணம்
டொமினிகன் குடியரசு விமான நிலையத்தில் ஒன்ராறியோ விமான நிறுவனப் பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் டொமினிகன் குடியரசு விமான நிலையத்தில் 200 கொக்கைன் பொதிகளை கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து, ஒன்ராறியோ விமான நிறுவனத்தின் பணியாளர்கள் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமனத்தில் கடத்தல் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி ஐந்து ஊழியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதில், டொமினிகன் குடியரசின் தேசிய போதைமருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்த தகவலில், மொத்தம் 8 பொதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொன்றிலும் 25 சிறிய பொதிகள் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய குடிமக்கள் 9 பேர்கள், இந்தியர் ஒருவர் மற்றும் டொமினிகன் ஒருவர் என மொத்த விமான ஊழியர்களையும் தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, டொமினிகன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தடுப்புக்காவலில் இருந்து விடுவிப்பதற்கான செயல்முறையை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.