மீண்டும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கும் கனேடிய மாகாணம்
ஒன்ராறியோ மாகாணத்தில் ஜனவரியில் இருந்து குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் என உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பில் மாகாண முதல்வர் டக் ஃபோர்டு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும், இந்த மாற்றம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, விலையுயர்வை கருத்தில் கொண்டு, தற்போது மணிக்கு 15 டொலர் என முடிவு செய்துள்ள இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தை பொறுத்தமட்டில் தற்போது குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 14.35 டொலர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 அக்டோபரில், அதுவரை 14 டொலர் என அமுலில் இருந்த குறைந்தபட்ச ஊதியமானது மணிக்கு 14.25 டொலர் என அதிகரிக்கப்பட்டது.
2018 ஜனவரில், அதுவரை 11.60 டொலராக இருந்த குறைந்தபட்ச ஊதியம் ஒரேயடியாக மணிக்கு 14 டொலர் என அதிகரிக்கப்பட்டது. ஆனால், 2018ல் ஒன்ராறியோ முதல்வராக டக் ஃபோர்ட் பொறுப்பேற்ற பின்னர், குறைந்தபட்ச ஊதியத்தை 15 டொலர் என உயர்த்தும் சட்டத்தை ரத்து செய்தார்.
தற்போது, எதிர்க்கட்சிகள் டக் ஃபோர்டின் அந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், மாகாண மக்களுக்கு மணிக்கு 5.300 டொலர் இழப்பை ஏற்படுத்தியவர் டக் ஃபோர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் தாம் பொறுப்புக்கு வந்த பின்னரே, மாகாண மக்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பு பெற்றுக்கொண்டுள்ளனர் என டக் ஃபோர் வாதிட்டுள்ளார்.
இருப்பினும், மாகாண முதல்வரின் தற்போதைய மனம் மாற்றம் அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டே எனவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.