மின்னஞ்சல் கடவுச்சொல் மறந்த ஒரு நொடி: 6,255 டொலர் அபராதம் செலுத்திய கனேடியர்
கனடா எல்லையில் வைத்து மின்னஞ்சல் கடவுச்சொல்லை மறந்த ரொறன்ரோ நபர் 6,255 டொலர் அபராதம் செலுத்திய சம்பவம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சென்று விட்டு கனடா திரும்பியிருந்த 56 வயது Saadi Kadhum என்பவரே கடவுச்சொல் மறந்து போனதால் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
ஜூலை மாத இறுதியில் மகளின் திருமணத்திற்காக Saadi Kadhum அமெரிக்கா சென்றுள்ளார். ரொறன்ரோவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் தமது வாகனத்தில் கனடா திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் டெட்ராய்ட் மற்றும் வின்ட்சருக்கு இடையே உள்ள Ambassador Bridgeல் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், அதிகாரிகளால் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சாந்திதழை சமர்ப்பிக்க கோரியுள்ளார்.
இதனையடுத்து தமது மொபைலில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் இருந்த சான்றிதழலை காண்பிக்க முயன்றவருக்கு, ஒரு நொடி அதன் கடவுச்சொல் மறந்து போயுள்ளது. பதறிப்போன அவர், பலமுறை முயன்றும் அந்த கடவுச்சொல் நினைவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி பதற்றத்தில் என்ன செய்வதென்றே அறியாமல் அவர் தடுமாறியுள்ளார். அதிகாரிகளும் அவரை வாகனத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு சில நிமிடங்கள் தம்மை மடிக்கணினியை பயன்படுத்த அனுமதித்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது எனவும், அனைத்து வித்தைகளையும் விரல் நுனியில் வைத்திருக்க நான் ஒன்றும் இளைஞர் இல்லையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் கடவுச்சொல் மறந்ததால், கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி அவருக்கு 5,000 டொலர் அபராதமும், விதிகளை மீறியதாக கூறி 1,255 டொலர் அபராதமும் விதித்துள்ளனர்.
மட்டுமின்றி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.