கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நீல் என்ற முதியவர், தனது மகனின் குரலில் பேசிய மோசடி கும்பலிடம் ஏமாந்து சுமார் 6,000 டொலர்களை இழந்துள்ளார்.
'அவசரகால மோசடி' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஏஐ தொழில்நுட்ப மோசடி குறித்து அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு புதன்கிழமையன்று நீலின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், அப்படியே நீலின் மகன் 'பிரையன்' பேசுவது போலவே பேசியுள்ளார்.

"போனில் பேசியவர், 'நான் யார் என்று தெரிகிறதா?' எனக் கேட்டார். நான் 'ஆம், பிரையன் தானே' என்றேன். அதற்கு அவர் 'ஆமாம்' என்றார். அது அப்படியே என் மகனின் குரலாக இருந்ததால், நான் என் மகனுடன் தான் பேசுகிறேன் என்று முழுமையாக நம்பினேன்." என்றார். ம
றுமுனையில் பேசிய நபர், தான் ஒரு கடுமையான விபத்தில் சிக்கியிருப்பதாகவும், கார் ஓட்டும்போது போன் பேசியதாகத் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சற்று நேரத்தில், மற்றொரு நபர் போனில் வந்து தான் பிரையனின் 'வழக்கறிஞர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவர் நீலிடம், "உங்கள் மகனை ஜாமீனில் எடுக்க $6,000 தேவைப்படுகிறது. இல்லையெனில் அவர் இன்று இரவு சிறையில் கழிக்க வேண்டியிருக்கும். தற்போது நீதிமன்றங்களில் வேலைகள் அதிகமாக இருப்பதால், பணத்தை வாங்க நாங்கள் ஒரு உபெர் (Uber) காரை உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள்" என்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மகன் ஆபத்தில் இருக்கிறான் என்று பயந்த நீல், உடனடியாக $6,000 பணத்தை ஒரு பார்சலில் வைத்து, வீட்டிற்கு வந்த உபெர் ஓட்டுநரிடம் ஒப்படைத்துள்ளார்.
மறுநாள் காலை, தன் மகனை நலம் விசாரிக்க நீல் தொலைபேசியில் அழைத்துள்ளார். "வழக்கறிஞருடனான சந்திப்பு எப்படி முடிந்தது?" என்று நீல் கேட்க, அவரது மகனோ "எந்த வழக்கறிஞர்?" என்று அதிர்ச்சியோடு கேட்டுள்ளார். "ஏன், நேற்று உனக்கு விபத்து நடந்ததே?" என்று நீல் கேட்க, "எனக்கு எந்த விபத்தும் நடக்கவில்லையே!" என்று மகன் கூறியுள்ளார்.
அப்போதுதான் தான் மிக மோசமாக ஏமாற்றப்பட்டதை நீல் உணர்ந்துள்ளார்.
இந்த அவசரகால மோசடிகள் இப்போது உலகளவில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. முன்னரெல்லாம் யாராவது தெரிந்தவர் போலப் பேசி ஏமாற்றுவார்கள். ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வந்த பிறகு, குற்றவாளிகளுக்கு ஒரு நபரின் குரலில் இருந்து வெறும் 10 விநாடிகள் கிடைத்தால் போதும். அதை வைத்து அப்படியே அந்த நபரைப் போலப் பேசும் போலி குரலை (Voice Cloning) உருவாக்கி விடுகிறார்கள்." என்று எச்சரித்துள்ளார்.