கனடா எல்லையில் இந்திய இளைஞருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்
அமெரிக்கா செல்ல முயன்ற இளைஞர் ஒருவருக்கு கனடா எல்லையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் விவாதமாகியுள்ளது.
கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்று மிசிசாகா பகுதியில் வசித்துவரும் பிரசாந்த் ராம்திலக் என்ற இந்திய இளைஞர் பணி நிமித்தம் கடந்த வாரம் நியூயார்க் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கான கடிதம் மற்றும் உரிய ஆவணங்களுடன் நயாகராவில் ரெயின்போ பாலம் அருகே சென்ற நிலையில், அமெரிக்க அதிகாரிகளால் அனுமதிக்க முடியாது என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஆனால், கனேடிய அதிகாரிகள் ராம்திலக் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 8 நாட்கள் இடைவெளியில் கொரோனா சோதனை மேற்கொண்டு, பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யவும் கோரியுள்ளனர். ராம்திலக் ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பினும் கனேடிய அதிகாரிகளால் தனிமைப்படுத்தலுக்கு ராம்திலக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
கனடாவில் இருந்து எல்லையை கடக்காத நிலையில் எப்படி கொரோனா விதிமுறைகளை மீறியதாகும் என கேள்வி எழுப்பியுள்ள ராம்திலக், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே எல்லையில் செலவிட்டதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராம்திலக் தொடர்பான இந்த விவகாரம் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது