கனடாவின் இந்தப் பகுதியில் செல்போன்களுக்கு முழுமையான தடை?
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும், குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மாகாண அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கல்வி அமைச்சர் போல் கலந்திரா தெரிவித்துள்ளார்.
லண்டன் பகுதியில் புதிய பாடசாலைகளை நிர்மானிப்பது தொடர்பான அறிவிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கான முக்கிய காரணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செல்போன் பயன்பாடு ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, பாடசாலை வளாகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
எனினும், உடல்நலக் காரணங்களுக்காக சில விதிவிலக்குகள் அளிக்கப்படும். மணிடோபா (Manitoba) மாகாணம் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்துள்ள நிலையில், ஒன்டாரியோ அதைவிடக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட ஒன்டாரியோ அரசு ஆர்வமாக உள்ளது.
சமூக ஊடகங்களின் அடிமையாக்கும் தன்மை, இணையவழி துன்புறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் சிறுவர்கள் ஆன்லைன் குற்றவாளிகளால் பாதிக்கப்படும் அபாயம் ஆகியவை இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.