பிரித்தானியாவில் அனாதையாக விடப்பட்ட குழந்தை: 32 வருடங்களுக்கு பின் நிகழ்ந்த ஆச்சரியம்
பிரிட்டனில் அனாதையாக விடப்பட்ட குழந்தை 32 வருடங்களுக்கு பின் சகோதரியை சந்தித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள Chesterfield என்ற பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு முன்பு ஒரு அட்டைப்பெட்டியில் கிடந்த பிறந்த குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்களான Daphne, Gill மற்றும் Susan ஆகிய மூவரும் கண்டு எடுத்திருக்கிறார்கள். அதன் பின்பு அன்புடன் குழந்தையை பராமரித்துள்ளார்கள்.
இதனிடையே இந்த தகவலை அறிந்த ஒரு தம்பதி குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்கள். Helen Knox என்ற அந்த குழந்தை மீது அதிக அன்பு செலுத்தி வளர்த்துள்ளார்கள். தற்போது 32 வயதாகும் Helen தன் உறவுகள் யாராவது இருப்பார்களா? என்று நினைத்து பார்த்துள்ளார்.
எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்திருக்கிறார். அதில் அவருக்கு ஒரு சகோதரி இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இவரின் சகோதரியான Jess என்பவரும் 14 மாத குழந்தையாக இருந்தபோதே சாலையோரம் விடப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இருவரும் சந்தித்துவிட்டார்கள்.
பல வருடங்களாக இருவரும் தங்களுக்கு உறவு என்று சொல்ல யாருமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டதால், கண்களில் நீர் பெருகி இருவரும் கட்டியணைத்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஹெலன், இது ஒரு நாள் நிகழ்ந்த சம்பவம் அல்ல, வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் பந்தம் என்று நினைத்துப்பார்த்தால் மனம் குதூகலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, அவர்களின் தாயையும் தொலைக்காட்சி குழுவினர் கண்டறிந்துவிட்டனர். எனினும், அவர் தன் பிள்ளைகளை சந்திக்க விரும்புகிறாரா? என்று தெரியாததால் அடுத்த முயற்சியை அந்த தொலைக்காட்சி மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.