கனடா தலைநகரில் போராட்டத்தில் ஈடுப்பட்ட லாரி சாரதிகள்!
கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு' என்ற பெயரில் லாரி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறித்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகர் ஒட்டாவாவில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, (Justin Trudeau) குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. நேற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களின் இந்த போராட்டம் “உண்மைக்கு ஒரு அவமானம்” என கூறி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் “கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் ஆகியவை ஜனநாயகத்தின் மூலக்கற்கள், ஆனால் நாஜி அடையாளங்கள், இனவெறி படங்கள் மற்றும் போர் நினைவுச்சின்னங்களை இழிவுபடுத்துதல் ஆகியவை இல்லை.
இது தொற்றுநோய், நம் நாடு மற்றும் நம் மக்கள் பற்றிய கதை அல்ல. கனடா மக்களுடன் நின்று இந்த தொற்றுநோயைக் கடந்து செல்வதில் எனது கவனம் உள்ளது” என கூறினார்.