நூற்றுக்கணக்கான மருத்துவமனை ஊழியர்களை ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பிய கனேடிய நகரம்
கொரோனா தடுப்பூசி தொடர்பில் நூற்றுக்கணக்கான மருத்துவமனை ஊழியர்களை ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பியுள்ளது ஒட்டாவா நகரத்து மருத்துவமனைகள்.
ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பல மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பெரும்பாலான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போது நகர நிர்வாகத்தின் காலக்கெடு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நூற்றுக்கணக்கான மருத்துவமனை ஊழியர்கள் ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது ஒருவகையில் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசிக்கான காலக்கெடு அக்டோபர் 15 என அறிவித்திருந்தன.
இதனையடுத்து நகரின் பெரும்பாலான மருத்துவமனை ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், சுமார் 200 பேர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர்.
அவர்களை தற்போது மருத்துவமனை நிர்வாகங்கள் ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பியுள்ளது.
மேலும், நவம்பர் 1ம் திகதி வரையில் இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றே தெரிய வந்துள்ளது.