கனடாவை உலுக்கிய மோசமான பேருந்து விபத்து: வெளியாகவிருக்கும் முக்கிய தீர்ப்பு
கனடாவை மொத்தமாக உலுக்கிய வெஸ்ட்போரோ பேருத்து விபத்து தொடர்பில் இன்று முக்கிய தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒட்டாவா பேருந்து சாரதிக்கு எதிரான தீர்ப்பானது புதன்கிழமை நீதிபதியால் வெளியிடப்பட உள்ளது.
கடந்த 2019ல் நடந்த இந்த பேருந்து விபத்து தொடர்பில் 44 வயதான சாரதி Aissatou Diallo, அபாயகரமாக வாகனத்தை செலுத்தியதாகவும் மரணத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி 3 பிரிவுகளிலும் அபாயகரமாக வாகனத்தை செலுத்தி உடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறி 35 பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த பேருந்து விபத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு டசினுக்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் தப்பினர். கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணையின் போது, அது ஒரு துன்பகரமான விபத்து, வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கலாம் என வழக்கை எதிர்கொள்ளும் Diallo-ன் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், Diallo தாம் செலுத்திய பேருந்தை உடனடியாக நிறுத்துவதற்கு முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதியில் இருந்து விலகிச்செல்லவும் முயற்சிக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
ஜூன் மாதமே மொத்த விசாரணையும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது கிரவுன் நீதிபதி தீர்ப்பை வெளியிட உள்ளார்.
அவருக்கான தண்டனை விவரங்கள் இதன் பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரதி Aissatou Diallo இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.