பாகிஸ்தானில் கோர விபத்து: 9 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்
பாகிஸ்தானில் குடிசை பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கடந்த திங்கட்கிழமை (18-04-2022) இரவு பாகிஸ்தான் - சிந்து மாகாணம் தாது மாவட்டத்தில் பைஸ் முகமது என்கிற கிராமத்தில் உள்ள குடிசை பகுதியில், இடம்பெற்றுள்ளது.
ஒரு குடிசை வீட்டின் சமயலறையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடிசைகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும், தீ மளமளவென பரவியதால் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.
இந்த தீவிபத்தில், 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
மேலும், தீயின் கோரப்படியில் சிக்கி 150 எருமை மாடுகள், மாடுகள், ஆடுகள் மற்றும் பிற கால்நடைகளும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலி ஷா, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.