பாரிசில் மூன்றுவயது சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான பெற்றோர்!
பிரான்ஸ்- பாரிஸின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 3 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் Val-de-Marne மாவட்டத்திற்குட்பட்ட நகரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் அந்த வீட்டுக்கு சென்றிருந்தனர். அங்கு 3 வயது சிறுமி ஒருவரது சடலத்தினை பொலிஸார் மீட்டனர். இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டபோது வீட்டில் அவரது மூத்த சகோதரி மட்டுமே இருந்துள்ளார்.
சிறுமியின் மரணத்திற்கான காரணம் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலைல் நாளை உடற்கூறு பரிசோதனை இடம்பெற்ற பின்னரே காரணங்கள் தெரியவரும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதேவேளை, சிறுமியின் சகோதரி கூறுகையில் , தங்கை இரண்டு நாட்களாக சுகவீனமுற்று இருந்ததாக தெரிவித்துள்ளார். சிறுமியின் மூக்கில் இருந்து இரத்தம் வந்தமையினால் சகோதரி சுடு நீரில் துணியை நனைத்து இரத்தம் வருவதனை நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளார். எனினும் இரண்டாவது நாள் குறித்த சிறுமி ஆபத்தான நிலைக்கு சென்றதாக உயிரிழந்த சிறுமியின் சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது நாள் சிறுமி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் உடனடியாக அவசர பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்டபோதே சிறுமி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமியின் உடல் நிலை குறித்து அவதானம் செலுத்த தவறிய பெற்றோர் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.