விமான நிலையத்தில் கதறி அழுத பயணி ; சமூக வலைதளத்தில் வைரலாகிய காணொளி
இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர்.
இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவர் செல்லவிருந்த விமானத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், இதன் பின்னர் அவருக்கு வேறு விமானத்தில் டிக்கெட் ஒழுங்கு செய்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே விமான நிலையங்களில் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு காரணமாக விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர்.
எனினும் இதனை பயணிகளுக்கு சரியான முறையில் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை என பயணிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்தாண்டு சிக்காகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணி கோபமடைந்து அங்கிருந்த கணினியை எடுத்து விமான நிலைய அதிகாரி மீது வீசிய வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.