தடை நீக்கம்; மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு நாட்டு பயணிகள் வருகை!
ஓமனில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நேற்று முதல் நீக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முதல் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் வருகை தொடங்கியது.
இந்நிலையில் ஓமன் விமான நிலையங்களின் துணைத்தலைவர் சவுத் பின் நாசர் அல் ஹுபைஷி கூறுகையில்,
இந்த புனித நாளில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் முழு செயல்பாடுகளுக்கு திரும்பும் நிலையில் உள்ளது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக அனைவரிடமும் ஒரு ஏக்கம் இருந்தது.
இன்று அது நிறைவேறி உள்ளது. அனைத்து நாடுகளில் இருந்து ஓமனுக்கு வரும் பயணிகள் மற்றும் குடும்பத்தினரை அன்புடன் வரவேற்கிறோம். தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எங்கள் பணியை தொடர உள்ளோம்.
ஓமன் விமான நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான திறன்மிக்க அதிகாரிகளுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறினார்.