போர் பதற்றம் மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை முயற்சி ; போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
அமெரிக்காவுடனான போர்நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, ஈரான் தூதுக்குழு பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தை வந்தடைந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, ஈரான் தூதுக்குழுவின் வருகையை எதிர்பார்த்திருந்த வேளையில், இஸ்லாமாபாத் நகரின் இரவு வானம் போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது, அங்கு வழங்கப்பட்டிருந்த வான்வழி பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் Flightradar24 தளத்தின் தரவுகளின்படி, இன்று காலை ஈரானிலிருந்து புறப்பட்ட இரண்டு பயணிகள் விமானங்கள் இஸ்லாமாபாத் அருகிலுள்ள ராவல்பிண்டியில் அமைந்துள்ள நூர் கான் விமானத்தளத்தில் தரையிறங்கியுள்ளன.
இந்த விமானத்தளம் பொதுவாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசுத் தூதுக்குழுக்களுக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, Fars News Agency தகவலின்படி, ஈரான் தூதுக்குழு இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதை பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
மேலும், IRAN04 மற்றும் IRAN05 என்ற அழைப்புக் குறியீடுகளைக் கொண்ட விமானங்கள் ஈரானிலிருந்து புறப்பட்டு ஆப்கானிஸ்தான் வான்பரப்பைக் கடந்து இஸ்லாமாபாத்தை நோக்கிச் சென்றதாகவும் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.
வழக்கமாக, ஈரானிய அரசுத் தொடர்புடைய விமானங்கள் தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்படுவது வழக்கம் என்றாலும், சமீபத்திய மோதல்களின் பின்னணியில் மாற்று விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதனை முன்னிட்டு இந்த தூதரகச் செயல்பாடுகள் நடைபெறுகின்றனவாகவும் சர்வதேச தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.