பிரித்தானியாவில் ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவல்
பிரித்தானியாவில் அரசாங்க ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது , அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வூதியம் பெறும் மக்களுக்கு ஒரு நாளைக்கு 11 பவுண்டுகளை மட்டுமே பெறக் கூடியதாக இருக்கும் என முன்னணி தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவில் வழக்கமாக எரிசக்தி கட்டணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6,616 பவுண்டாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வே ஓய்வூதியத்தில் குறைவு ஏற்பட காரணமாகியுள்ளதென பிரித்தானிய தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வயதானவர்களுடன் பணிபுரியும் முன்னணி தொண்டு நிறுவனம், இதுகுறித்து தீவிரமாக கவலைப்படுவதாகவும், அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

2023-24ஆம் ஆண்டுகளுக்கு வீதங்கள் நிர்ணயிக்கப்படும் போது செப்டம்பரில் பணவீக்கம் 10.1 சதவீதமாக இருந்தால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் முழு ஓய்வூதியம் 10,600 பவுண்டுகளாக உயரும். எரிவாயு மற்றும் மின்சார செலவுகள் ஓய்வூதியத்தில் 62 சதவீதம் ஆகும், இதனால் வயதானவர்கள் உணவு, போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளுக்கு ஒரு நாளைக்கு 10.92 பவுண்டுகள் மட்டுமே செலவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை மின்சாரத்தை சேமிக்க முயற்சிப்பதற்காக ஒரே இரவில் குளிர்சாதன பெட்டியை அணைப்பது போன்ற விஷயங்களைப் பற்றி அரசாங்கம் பேசிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாங்கள் தீவிரமாக கவலைப்படுகிறோம். இது நிறைய பேருக்கு பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.