கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகள்! வலைவீசி தேடும் பொலிஸார்
பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தில் உள்ள உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை பொலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கந்தர்வகோட்டையில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் (21-07-2022) இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு ஆலயம் நடைசாத்தப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆலயம் செயல் அலுவலர் வித்யா அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.