கொரோனாவை கண்டறிய பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி!
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பி.சி.ஆர் மற்றும் ஓன்டிஜன் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு பரிசோதனை உபகரணமொன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் எம்.டி.லமாவங்ஷ மற்றும் அப்பரிசோதனை உபகரணத்தைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்னாந்து உள்ளிட்ட குழுவினரால் அவ்வுபகரணம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் (Keheliya Rambukwella) கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை உபகரணத்தின் மூலம் மிகவும் விரைவாகவும் குறைந்த செலவிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங்கண்டுகொள்ளமுடியும். அதன்படி குறித்த உபகரணத்தைப் பயன்படுத்தி 1500 ரூபா செலவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளமுடியும் என்று அதனைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
இந்த உபகரணத்திற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தொழில்நுட்பக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பதிவுசெய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த பரிசோதனை உபகரணத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச பேற்றன்ட் சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
'சுபீட்சத்திற்கான இலக்கு' என்ற செயற்திட்டத்திற்கு அமைவாக உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் முழுமையான ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையர்களால் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.