சீனாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம்!
மூத்த குடிமக்கள், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவு, வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. கம்யூனிசம் நாடான சீனா, தனக்கென தனி ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டு உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக திகழ வேண்டும் என விரும்பியது.
அப்படி ஆக வேண்டுமென்றால், பொருாளாதாரத்தில் தலைசிறந்து உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கு மக்கள் தொகை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று கருதுதியது.
ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தைகள்
இதனால் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை 1979-ம் ஆண்டு சீனா அமல்படுத்தியது. இந்த கொள்கையை கடுமையான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விதிமுறையை மீறினால் அபராதம், வேலை இழப்பு, வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு, கருத்தடை போன்றவற்றால் மக்களை கட்டுப்படுத்தியது.
தொழிற்சாலைகளை கட்டவும் இயக்கவும் தற்போதுள்ள பணியாளர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு யுக்தி சீனாவுக்கு நன்றாக கைக்கொடுத்தது.
கொள்கையால் ஏற்பட்ட குறைபாடு
எனினும், ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் வயது மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகமாக, வேலை செய்பவர்களுக்கான நபர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்ததை சீனா உணர்ந்தது.
தற்போது சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 26.4 கோடி பேர் உள்ளனர். 1.41 பில்லியன் மக்கள் தொகையில் இது 19 சதவீதமாகும். 2025-ல் ஐந்து நபர்களில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்.
ஒரு குழந்தை கொள்கை அமல்படுத்திய பின் கருவுறுதல் சதவீதம் சீனாவில் வெகுவாக குறைந்தது. சீனாவில் 1979-80-ல் சராசரி மனிதனின் ஆயுட்காலம் 68-க்குள் இருந்தது. சுகாதார வசதிகளின் முன்னேற்றம் காரணமாக 2020-ல் 78-ஐ தொட்டுள்ளது. இது சீனா அதிகமான மக்களுக்கு சமூக- பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
கருவுறுதல் சராசரி 2.1-க்குப் பதில் 1.3 ஆக மிகவும் குறைவாக இருந்ததால், 2000-ம் ஆண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது.
குழந்தைகள் பெற்றெடுக்கும் கொள்கையில் தளர்வு
2000-ல் தம்பதிகள் இருவரும் அவர்களது பெற்றோர்களுக்கு ஒரு குழந்தையாக இருந்தால், அவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என சீனா கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. 2013-ல் மேலும் ஒரு மாற்றம் செய்தது. ஆனால் இந்த இரண்டு கொள்கையினாலும் கருவுறதல் சதவீதம் அதிகரிக்கவில்லை.
ஒரு குழந்தை கொள்கை நீக்கம்
2015-ல் ஒரு குழந்தை கொள்கையை நீக்கிவிட்டு பெற்றோர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது சீனா. சீனாவில் குழந்தை பிறப்பு சதவீதம் அதிகரித்து 2016-ல் 1000 பேருக்கு 12.95 குழந்தைகள் என்ற அளவில் இருந்தது. 2016-ல் சீனாவில் 1.78 கோடி குழந்தைகள் பிறந்தன.
ஆனால், 2017-ல் 1.72 கோடியாக குறைந்தது. 2018-ல் 1.52 கோடியும், 2019-ல் 1.46 கோடியும், 2020 ஒரு கோடியை விட சற்று அதிகமாகவும் குழந்தைகள் பிறந்துள்ளன. 2019-ஐ விட 2020-ல் 31 சதவீதம் குறைந்துள்ளது. இதனடிப்படையில் வல்லுனர்கள், சீன மக்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை.
சீன மக்களின் நீண்டகால சமூக-அரசியல் நிலைமை மற்றும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான செலவுகள் ஆகியவை தம்பதியினர் அதிக குழந்தைகளுக்கு செல்வதைத் தடுக்கும் காரணங்களில் ஒன்று என்கின்றனர்.
நீண்ட ஆண்டுகளான குழந்தைகள் பிறப்பு கட்டுப்பாட்டு காரணமாக சீனாவில் குழந்தை பிறப்பதற்கான வயதில் நுழையும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக குழந்தை பிறக்கும் வயதில் பெண்களின் எண்ணிக்கை 50 லட்சம் வரை குறைந்துள்ளது என புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் எண்ணிக்கை, குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவு, வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை சுருங்கி வருவது, அவர்களுக்கான பென்சன், சுகாதாரம், சமூக பாதுகாப்பு சேவை ஆகியவை சீனா அரசுக்கு கூடுதல் சுமையாக சேர்ந்துள்ளது.
இது அனைத்தும்தான் சீனா அரசு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் முடிவு எடுக்க தள்ளியுள்ளது.