பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அடித்த நபர்! பரபரப்பு காணொளி
தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு விஜயம் செய்தபோது பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரானை செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) ஒரு நபர் முகத்தில் அறைந்தார்.
ஆன்லைனில் பரவலாக பரவி வரும் இது பற்றிய ஒரு வீடியோவை மேக்ரானின் அலுவலகம் உறுதிப்படுத்தியது. ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியாற்ற மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபின், சிறிய நகரமான டெய்ன்-எல் ஹெர்மிட்டேஜில் போக்குவரத்து தடுப்புகளுக்குப் பின்னால் காத்திருந்த பொதுமக்களை பிரெஞ்சு அதிபர் சந்திப்பதை வீடியோவில் காண முடிகிறது.
??? | BREAKING: Macron slapped in the face
— Politics For All (@PoliticsForAlI) June 8, 2021
Via @ConflitsFrance pic.twitter.com/1L7eYTsvDR
ஒரு நபர் இமானுவேல் மேக்ரானை முகத்தில் அறைவதையும் அவரது மெய்க்காப்பாளர்கள் அந்த நபரை அந்த இடத்திலிருந்து இழுத்துச் செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
மேக்ரொன் உடனடியாக அந்த இடத்திலிருந்து அழைத்துச்செல்லப்படுகிறார். இந்த தாக்குதலில் இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு செய்தி ஒளிபரப்பாளர் பி.எஃப்.எம் டிவி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தேசிய சட்டமன்றத்தில் பேசிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், 'அதிபர் தாக்கப்பட்டது, ஜனநாயகம் தாக்கப்பட்டது போன்றது' என்று கூறினார். அவரது பேச்சுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கை தட்டினர்.
"ஜனநாயகம் என்பது விவாதம், உரையாடல், கருத்துக்களை எதிர்கொள்வது, நியாயமான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது ஆகியவையாகும். நிச்சயமாக, அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறை, வாய்மொழி தாக்குதல் மற்றும் உடல்ரீதியான தாக்குதலாக இருக்கக்கூடாது" என்று காஸ்டெக்ஸ் கூறினார்.
தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் ட்விட்டரில் "குடியரசின் அதிபரை குறிவைக்கும் வன்முறைச் செயலாகும் இது" என்று கண்டித்தார். இமானுவேல் மேக்ரான் தனது உயர்மட்ட அரசியல் எதிரியாக இருந்தாலும், இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் பின்னர் கூறினார்.
பிரான்சின் (France) அடுத்த அதிபர் தேர்தலுக்கு ஒரு வருட காலமே உள்ளது. நாடு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது. நாட்டு மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ள பிரஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் நாட்டின் பல இடங்களுகு பயணம் செய்து கோண்டிருக்கிறார்.
தொற்றுநோயின் (Pandemic) தாக்கத்தை புரிந்துகொள்ளவும், அடுத்த தேர்தலுக்காக மக்களை சந்திக்கவும் தான் இந்த பயணங்களை மேற்கொண்டுள்ளதாக இமானுவேல் மேக்ரான் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை குறிவைத்து பிரான்சில் நடைபெறும் வன்முறை குறித்து ஏற்கனவே பிரான்சில் கவலை அதிகமாக உள்ளது. உடல் ரீதியான தாக்குதல்கள், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களால் குறிவைக்கப்பட்டவர்களில் கிராம மேயர்களும் சட்டமியற்றுபவர்களும் அடங்குவர்.
ஆனால் பிரான்சின் அதிபர் இதுவரை எந்த தாக்குதலும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்தார். தற்போது அவர் மீது நடந்துள்ள தாக்குதல் பிரான்சில் அதிர்வலைகளை அதிகப்படுத்தியுள்ளது.