நடுவானில் தீடிரென மயக்கமடைந்த விமானி! பயணியின் நெகிழ்ச்சியான செயல்
அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு பஹாமாவில் இருந்து இரண்டு பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா நகருக்குச் சென்றது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் பைலட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.
இதைப் பார்த்த பயணி ஒருவர் விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடன் பேசி விபரம் தெரிவித்தார்.
இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியவர் அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளைக் கூறினார்.
அவரை வைத்தே விமானத்தை இயக்கினார். முன் அனுபவம் இல்லாத அந்தப் பயணியும் துணிச்சலுடன் கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் அறிவுரைப்படி விமானத்தை இயக்கி, பத்திரமாக தரையிறக்கினார்.
விசாரணையில், புளோரிடாவில் வசிக்கும் தன் கர்ப்பிணி மனைவியைப் பார்ப்பதற்காக சிறிய ரக விமானத்தில் அந்தப் பயணி பயணம் செய்துள்ளது தெரிய வந்தது.
விமானி மயங்கியதும் எவ்வித பதற்றமும் இன்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததுடன், அவர்களது அறிவுரைப்படி விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.