கனடா விமான நிலையத்தில் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
கனடா விமான நிலையமொன்றில் 400 கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடைசி குற்றவாளியை நெருங்கியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு பார்சல்களை, அவை தொடர்பான ஆவணங்களுடன் வந்த ஒருவர், தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

Credit : PRP
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்தது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது.
அந்த பார்சல்களில் ஒன்றில் 400 கிலோ தங்கம் இருந்துள்ளது. அதன் மதிப்பு 20 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 2024ஆம் ஆண்டு மே மாதம், Archit Grover என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், Parmpal Sidhu (54), Amit Jalota (40), Prasath Paramalingam (36) Ali Raza (37), Ammad Chaudhary (43) மற்றும் Durante King-Mclean (27) ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடைசி குற்றவாளியை நெருங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Credit : Peel Police
உண்மையில், பிரீத் பனேசர் (Preet Panesar, 32) என்னும் அந்த நபர், அந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டார்.
அவர் இந்தியாவிலுள்ள சண்டிகர் என்னும் இடத்தில் தன் மனைவியுடன் அமைதியாக வாழ்ந்துவருகிறாராம்.
பனேசரின் மனைவியான பிரீத்தி பனேசர், மிஸ் இந்தியா உகாண்டா போட்டியில் வென்றவரும், பாடகியும், நடிகையும் ஆவார்.
இந்தியாவிலும் பனேசர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அவரை கனடாவுக்கு நாடுகடத்த கனேடிய பொலிசார் முறைப்படி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.