டர்ஹமில் பல பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை
டர்ஹம் பிராந்தியத்தில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் பல பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
க்ளாரிங்டனில் அமைந்துள்ள களஞ்சியச்சாலை கட்டடமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக டர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
க்ளாரிங்டன் கோர்டைஸ் கோர்ட் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பகுதியை கடந்து சென்ற பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் தீ விபத்து பற்றிய காட்சிகளை பதிவேற்றியிருந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் கட்டடம் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சேத விபரங்கள் பற்றிய தகவல்களை டர்ஹம் பொலிஸார் வெளியிடவில்லை.
எதனால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பதுடன் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.