உலகம் அழிவுச் சுழலுக்கு செல்வதாக போப் லியோ கடும் எச்சரிக்கை
உலகெங்கிலும் போர்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிகரித்து வரும் இராணுவச் செலவீனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்து போப் லியோ ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ரோமில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய போப் லியோ, ஐரோப்பிய நாடுகளின் இராணுவச் செலவீனங்கள் பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய உச்சத்தை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் இராணுவச் செலவினம் 14 சதவீதம் அதிகரித்து 864 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான முதலீடுகளை குறைத்து, இராஜதந்திரத்தின் மீதான நம்பிக்கையை குறைத்து ஆயுதங்களை அதிகரிப்பதை “தற்காப்பு” என அழைக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் பொது நலனுக்கு பயனளிக்காமல், மேல்தட்டு வர்க்கத்தை மட்டுமே வளப்படுத்தும் நிலை உருவாகும் என அவர் விமர்சித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் தொடர்பாகவும் போப் லியோ கருத்து வெளியிட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், யுக்ரைன், காசா, லெபனான் மற்றும் ஈரான் ஆகிய பகுதிகளில் நடக்கும் மோதல்கள், போர் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் இணைப்பால் உருவாகும் “மனிதநேயமற்ற பரிணாமத்தை” வெளிப்படுத்துகின்றன என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலை உலகை “அழிவுச் சுழலுக்கு” இட்டுச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.