மர்ம நபர்களால் பிரபல ராப் இசை இளம் பாடகர் சுட்டுகொலை!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் பிரபல ராப் இசை பாடகரான 28 வயதான டேக்ஆப் (Takeoff) மர்ம நபர்கள் சிலரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பகடைக்காய் விளையாட்டின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென சிலர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் டேக்ஆப்பின் தலை அல்லது கழுத்துக்கு பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், சம்பவ பகுதியிலேயே அவர் உயிரிழந்து உள்ளார். அப்போது அந்த பகுதியில் 50 பேர் வரை இருந்து உள்ளனர்.
இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
துப்பாக்கி சூடு நடந்தபோது, டேக்ஆப்பின் மாமா குவாவோ, மிகோஸ் ராப் இசை குழுவின் மற்றொரு நபர் ஆகியோர் பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
ஜார்ஜியாவின் லாரன்ஸ்வில்லே பகுதியில் கிர்ஷ்னிக் காரி பால் என்ற பெயரில் பிறந்தவரான டேக்ஆப் 2008-ம் ஆண்டு ராப் இசையில் தனது மாமாவுடன் தன்னை இணைத்து கொண்டார்.
2011-ம் ஆண்டில் இந்த குழுவினர் மிகோஸ் என்ற பெயரிலான ராப் இசை குழுவை தொடங்கினர்.