கொரோனாவை முற்றிலும் அழிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கா: நிபுணர்கள் விளக்கம்
கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகள் மாற்று பல வைரஸ்கள் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி கண்டறியப்பட்டால் கொரோனா முற்றிலும் ஒழிந்து விடும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ்கள் அசலை விட வீரியமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டின் விரைவில் மூன்றாம் அலைக்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை இந்த உலகை விட்டு முற்றிலும் ஒழித்து விட முடியுமா என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனிடையே கோட்பாட்டளவில் உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸை ஒழிப்பது போலியோவை விட மிகவும் சாத்தியமானதே என்று சுகாதார நிபுணர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் கொரோனவை ஒழிப்பதற்கான சாத்தியம் பெரியம்மை நோயை ஒழித்ததை விட மிகக் குறைவு என்று பொது சுகாதார நிபுணர்களின் ஆய்வு தெரிவிக்கிறது.
சமீபத்தில் பிஎம்ஜே குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வின் படி, கொரோனா வைரஸின் உலகளாவிய ஒழிப்பு போலியோவை விட மிகவும் சாத்தியமானது, ஆனால் பெரியம்மை நோயை விட கணிசமான சாத்திய குறைவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், சமூக அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் பெரியம்மை, போலியோ, கொரோனா ஆகிய 3 நோய்களின் ஒழிபிற்கான சாத்திய கூறுகளை நிபுணர்கள் இந்த பகுப்பாய்வில் மதிப்பிட்டுள்ளனர்.
1980-ல் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை, உலகளாவிய ஒழிப்பு சாத்தியக்கூறுகளுக்கான அதிகபட்ச சராசரி மதிப்பெண்ணை கொண்டிருக்கிறது. பெரியம்மை சராசரியாக 2.7 மதிப்பெண் பெற்றது. கொரோனா தொற்றின் சராசரி மதிப்பெண் 1.6 மற்றும் போலியோவின் சராசரியாக 1.5ஆக இருக்கிறது.
நியூசிலாந்தின் ஒடாகோ வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் (University of Otago Wellington) பொது சுகாதார நிபுணர்கள் கூறுகையில் பொது சுகாதார நடவடிக்கைகள், தடுப்பூசிகள், கொரோனவை ஒழிக்க வேண்டும் என்பதற்கான உலகளாவிய ஆர்வம் உள்ளிட்டவை கொரோனாவை ஒழிப்பதை சாத்தியமாக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கொரோனாவுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸின் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் வேரியன்ட்களுக்கு எதிராக போதுமான அளவு அதிக தடுப்பூசி கவரேஜைப் பெறுவதில் முக்கிய சவால்கள் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் பகுப்பாய்வு ஒரு ஆரம்ப முயற்சியாக இருந்தாலும் சாத்தியமான மண்டலங்களில், குறிப்பாக தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், கொரோனா ஒழிப்பு சாத்தியம் தான் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.
மேலும் பெரியம்மை மற்றும் போலியோவுடன் ஒப்பிடுகையில், கொரோனா ஒழிப்பின் தொழில்நுட்பச் சவால்களில் மோசமான தடுப்பூசி ஏற்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் வகையில் அதிக அளவில் பரவக்கூடிய வேரியன்ட்கள் தோன்றுவது உள்ளிட்ட நிகழ்வுகள் உலகளாவிய தடுப்பூசி திட்டங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். எனினும் வைரஸின் பரிணாம வளர்ச்சிக்கு நிச்சயமாக வரம்புகள் இருப்பதால் இறுதியாக ஒருகட்டத்தில் வைரஸ் பீக் பிட்னஸை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
அப்போது அவற்றை ஒழிக்கும் வகையில் மேலும் சில புதிய தடுப்பூசிகளை உருவாக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த வைரஸ் தொற்று காட்டு மற்றும் வீட்டு விலங்குகளைப் பாதிக்கலாம் என்றாலும், இது ஒழிப்புக்கு கடுமையான சவாலாக இருக்க வாய்ப்பில்லை.
அதே போல பெரியம்மை மற்றும் போலியோ நோய்களை போலில்லாமல் எல்லை கட்டுப்பாடுகள், சமூக விலகல், தொடர்புத் தடமறிதல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகள் கொரோனா ஒழிப்பிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.