நாடு கடத்தப்பட இருந்த வெளிநாட்டவர்... கடைசி நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய மாற்றம்
பிலிப்பைன்சிலிருந்து 2007ஆம் ஆண்டு ரொரன்றோவுக்கு வந்தார் Carlo Escario. மருத்துவ உதவியாளராக பணியாற்றிய Carloவுக்கு, மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிரந்தர வாழிட உரிமம் கிடைத்தது.
ஆனால், அவருக்கு ஏற்கனவே பிலிப்பைன்சில் திருமணமாகி ஒரு குழந்தையும் இருப்பது தெரியவரவே, அதை அவர் தனது நிரந்தர வாழிட உரிம விண்ணப்பத்தில் தெரிவிக்காததையடுத்து, 2013ஆம் ஆண்டு அவரது புலம்பெயர்ந்தோர் நிலை ரத்து செய்யப்பட்டது.
நேற்று காலை 7.30 மணிக்கு அவர் பிலிப்பைன்சுக்கு விமானம் ஏறவேண்டும். அதாவது பிலிப்பைன்சுக்கு நாடு கடத்தப்பட வேண்டும். அதற்காக தயாராக பெட்டி படுக்கைகளுடன் எல்லை பாதுகாப்பு அலுவலகத்தின் முன் அமர்ந்திருந்த Carloவுக்கு, 8.39க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய அதிகாரி ஒருவர், Carlo, உங்களுடைய நாடுகடத்தல் உத்தரவு ஜூன் மாதம் 22 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நீங்கள் வந்து உங்கள் பாஸ்போர்ட் முதலான ஆவணங்களை வாங்கிக்கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று கூற, Carloவால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. நடந்தது என்னவென்றால், Carlo பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
அடுத்த டோஸ் ஜூன் மாதம் 11ஆம் திகதிதான் கொடுக்கப்படும். அதற்கு முன் அவர் நாடு கடத்தப்பட்டுவிட்டால், அவரால் இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ல முடியாது.
கொரோனா தொற்றால் தடுமாறி வரும் பிலிப்பைன்சில் பைசர் தடுப்பூசியும் கிடையாது. ஆகவே, Carlo பிலிப்பைன்சுக்கு சென்றுவிட்டால், அவர் வேறொரு நிறுவன தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டியிருக்கும்.
அதனால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதும் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவரது ஆதரவாளர்கள், Carlo இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசியைப் பெறும் வரையிலாவது அவரது பயணத்தை தள்ளிவைக்கக்கோரி ஒன்லைனில் மனு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
அது இப்போது 8,200 கையெழுத்துக்களை பெற்றுவிட்டது. இப்படித்தான் அவரது நாடு கடத்தப்படும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் முதல் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள Carlo, தன் தவறுகளை ஒப்புக்கொள்வதாகவும்,
பிலிப்பைன்சுக்கு சென்றாலும், மீண்டும் விண்ணப்பித்து கனடாவுக்கு வந்து ஒரு நாள் நிரந்தர வாழிட உரிமம் பெற இருப்பதாகவும், தான் நேசிக்கும் மருத்துவ தொழிலை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.